அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் 2023

Children_bookday_2023

 

படம் நன்றி – (IBBY-Greece)

எல்லாக் குழந்தைகளுக்கும் அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்! 

நான் ஒரு புத்தகம்;என்னை வாசி” (“I am a book, read me”)என்பது, 2023 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்.

‘சிறார் புத்தகங்களுக்கான அனைத்துலக போர்டு’ (International   Board on Books for Young people) (IBBY) என்ற லாபநோக்கற்ற தன்னார்வல அமைப்பு, அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக் (International Children’s Books Day-2023) கொண்டாடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாடுகளில், இதன் கிளைகள் பரவியுள்ளன.

ஒவ்வோராண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதன் பொறுப்பை ஏற்கின்றது. அந்நாட்டிலுள்ள ஓர் எழுத்தாளர் குழந்தைகளுக்கான செய்தியை வெளியிடுகின்றார். குழந்தைகள் நூல்களில் ஓவியம் வரைபவர் போஸ்டர் தயாரிக்கிறார்.

இந்தாண்டு இவ்வமைப்பின் கிரீஸ் நாட்டுக் கிளை, இதை ‘ஸ்பான்சர்’ செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான கிரீஸ் நாட்டின்  போஸ்டரை, கிரேக்க எழுத்தாளர் (Vagelis
Iliopoulos) வேகலிஸ் இயோபுலோஸ்  என்பவரும், ஃபோடினி ஸ்டெஃபானிடி (Photini Stephanidi) என்ற ஓவியரும், வடிவமைத்துள்ளனர். “I am a book, read me”என்பது இயோபுலோஸ் எழுதியுள்ள கவிதையின் முதலடியாகும்.

டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் நாள், 1967 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப்படுகின்றது. 

இவர் குழந்தைகளுக்காக எழுதிய நூல்களுள், நம்மிடையே மிகவும் பிரபலமானது ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) இவரது கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன.

உலகெங்கிலும் வாசிப்பை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் புத்தகங்கள் குறித்த கவனத்தை மேம்படுத்தவும், புதிய போஸ்டர் மூலமாகவும் பல்வேறு நிகழ்வுகள் மூலமாகவும் பரப்புரை செய்யப்படுகின்றது.  பல்வேறு பள்ளிகளிலும் புத்தகக் கடைகளிலும் இந்த நாளையொட்டி சிறப்பான நிகழ்வுகள் நடத்தப் பெறுகின்றன; நூலகங்களில் கதைகளைச்
சொல்லிக் குழந்தைகளை மகிழ்விக்கின்றனர்.

இந்நாளைக் கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கங்களாவன:

குழந்தைகள் நூல்கள் மூலமாக, உலகளாவிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்;

உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்;

தரமான சிறார் நூல்களை வெளியிடுவதற்கும், அவற்றைக் குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கும், ஊக்கப்படுத்துதல்; (குறிப்பாக வளரும் நாடுகளில் இதைச் செயல்படுத்துதல்);

குழந்தைகளிடம் புழங்குபவர்களுக்கும், சிறார் இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஆதரவும், பயிற்சியும் அளித்தல்;

சிறார் இலக்கியத்தில் ஆய்வை மேம்படுத்துதல்; ஐநா மன்ற விதிகளின் படி குழந்தைகளின் உரிமையை உறுதி செய்தல் ஆகியனவாகும்.     

இந்நாளில் குழந்தைகளுக்குப் பாடப்புத்தகங்கள் அல்லாத மற்ற நூல்கள் வாங்கிக் கொடுத்து,
சிறார் வாசிப்பை ஊக்குவிப்போம்!

வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

 

Share this: