புலிக்குகை மர்மம்

pulikugai marmam book cover

இந்நாவலில் வரும் கேப்டன் பாலு, மிகச் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவன்.  படிப்பிலும் அவ்வளவு சூட்டிகையில்லை.  பத்தாம் வகுப்பில், ஒரு முறை தோல்வியுற்றவன்.  ஆனாலும் மாதாகோவில் தெருவிலிருந்த பையன்களுக்கு, அவன் தான் கதாநாயகன்.  படிப்பினால் மட்டும் தலைமைப் பண்பு வருவதில்லை என்ற கருத்தும், இதிலிருந்து நாம் பெறுகிறோம்.  ஆசிரியருடைய ‘ஆதனின் பொம்மை’ என்ற சிறார் நாவலிலும், இவனே நாயகன்.

மரம் ஏறுவதிலிருந்து கிரிக்கெட் வரை, எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும், அவனை அடித்துக் கொள்ள ஆளில்லை.  எறிபந்து, கபடி, பம்பரம், கல்லா மண்ணா, மண்ணா மரமா, கோலிக்குண்டு, செதுக்குமுத்துக் கல் எனக் கிராமத்து விளையாட்டுகள் சிலவற்றை இதில் அறிமுகப்படுத்தியிருக்கின்றார், ஆசிரியர்.

கோவில்பட்டி ஊரின் தெற்கு மூலையிலிருந்த, சொர்ணமலையின் அடிவாரத்தில் ஒரு புலிக்குகை இருக்கின்றது.  இருள் சூழ்ந்த அந்தக் குகைக்குப் பெரியவர்களே போக பயப்படுவார்கள்.  குகைக்குக் கீழே இருந்த பெரிய மைதானத்தில், மேட்டுத்தெரு வெங்கடேஷ் குழுவுக்கும், மாதாக் கோயில்தெரு பாலு குழுவுக்கும், கிரிக்கெட் போட்டி நடக்கிறது.  அச்சமயம் புலிக்குகையின் அருகில், அந்நியர்களின் சந்தேகத்துக்குரிய நடமாட்டத்தைச் சிறுவர்கள் கவனிக்கிறார்கள்.  தொடர்ந்து அவர்கள் குழுவில் விளையாடிய சிறுவன் மாரி, காணாமல் போகிறான்.

மாரி எங்கே?  மாரியைத் தேடி பாலு தலைமையில் சென்ற சிறுவர்கள், அவனைக் கண்டுபிடித்தார்களா? அந்தப் புலிக்குகைக்குள் இருந்த மர்மம் என்ன?  அந்த சந்தேகத்துக்குரிய நபர்களின் தலைவன் யார்? தெரிந்து கொள்ள நாவலை வாசியுங்கள்.  

பதின்பருவத்தினரின் வெறும் பொழுது போக்கு சாகசமாக இல்லாமல் சமூகத்துக்கு உதவக்கூடிய சாகசமும், விறுவிறுப்பும் நிறைந்த நாவல். அவசியம் இளையோர்க்கு வாங்கிக் கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள். 

வகைஇளையோர் நாவல்
ஆசிரியர்உதய சங்கர்
வெளியீடுவானம் பதிப்பகம், சென்னை. (9176549991)
விலை₹ 60/-
புலிக்குகை மர்மம்-இளையோர் நாவல்
Share this: