குட்டி இளவரசன் (The Little Prince)

kutti ilavarasan book cover

பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த, அந்த்வான் து செந்த்-எக்சுபெரி, இரண்டாவது உலகப்போரில், விடுதலை ராணுவத்தில் சேர்ந்தார்.  உலகப்போர்ச் சூழலின் போது, இவர் எழுதிய மூன்று நூல்கள், ‘War Pilot’, ‘Letter to a Hostage’, ‘The Little Prince.’

குட்டி இளவரசன் (The Little Prince) உலக முழுக்க, குழந்தைகள் கண்டிப்பாக வாசித்தே ஆக வேண்டும் என்ற பட்டியலில், இடம் பிடிக்கும் நூல்களில் ஒன்று.  பிரெஞ்சு நாவலான இது, 1943 ல், வெளியானது.  

இதில் ஆசிரியரே கதை சொல்லியாக இருக்கின்றார். தம் ஆறாவது வயதில் , யானையை விழுங்கிய பாம்பு படத்தை வரைந்து, பெரியவர்களிடம்  காட்டிய போது, அதைத் தொப்பி என்று அவர்கள் சொன்னதுடன், படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, புவியியல், வரலாறு, கணிதம் போன்ற பாடங்களில் கவனத்தைத் திருப்புமாறு, புத்திமதி கூறினார்கள் என்றும், தாம் ஓவியம் எனும் மகத்தான கலையைக் கைவிட, அதுவே காரணமாயிற்று என்றும், வருத்தத்துடன் சொல்கிறார், ஆசிரியர்.    

“பெரியவர்கள் ஒரு போதும், எதையும் தாங்களாகவே புரிந்து கொள்வதில்லை.  எப்போதும் ஓயாமல், அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது, குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கின்றது” என்று அவர் சொல்லியிருப்பது, பெரியவர்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடிய உண்மை.  உலக முழுக்க, பெரியவர்களின் அடிப்படை பண்பு ஒரே மாதிரி தான் இருக்கின்றது! 

இது சிறுவர் நாவல் எனினும், பெரியவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் என்பதற்கு, இது ஓர் உதாரணம்.  

ஆசிரியர் ஓட்டிய விமானம் பழுதடைந்து, சகாரா பாலைவனத்தில் இறங்கி விடுகின்றது.  மனித நடமாட்டமே இல்லாத, அந்த இடத்தில்  ஆசிரியர், வேறு ஒரு குட்டி கிரகத்திலிருந்து வந்த குட்டி இளவரசனைச் சந்திக்கிறார்.  

“எனக்கு ஒரு ஆட்டுக்குட்டி, வரைந்து கொடு,” என்கிறான் அவன்.  சில திருத்தங்களுக்குப் பிறகு, அவன் விரும்பியது போல், இவர் வரைந்து கொடுக்கிறார். ஒவ்வொரு நாளும், அவனுடைய கிரகத்தைப் பற்றியும், பல கிரகங்களுக்கு அவன் சென்று வந்த, பயணங்கள் பற்றியும், அறிந்து கொள்கிறார்.  

தன் கிரகத்தில் ரோஜா கன்று போலவே, முளைக்கும் பவோபாப் மரக்கன்றுகளை, இடைவிடாமல் பிடுங்கி எரிய வேண்டும் என்கிறான் இளவரசன்.  ஏன் என்ற கேள்விக்கு, 

“ஒரு பவோபாப் மரத்தை அழிப்பதில், காலம் தாழ்த்தினால், பிறகு என்றென்றும் அழிக்க முடியாது.  அது கிரகம் முழுவதும், பரவிவிடும்.  வேர்கள் கிரகத்தை ஊடுருவித் துளைத்துவிடும்”. என்று பதிலிறுக்கிறான்.   

பவோபாப் மரம் என்பது,, ஹிட்லரின் நாசிசத்தைக் குறிக்கிறது, என்பது திறனாய்வாளர்களின் கருத்து.  தற்காலத்தில் நம் நாட்டில், வேகமாகப் பரவிவரும் பாசிசத்தை இது குறிப்பதாகவும், நாம் எடுத்துக் கொள்ளலாம்.

யாராவது ஒருவனுக்காவது, தான், அரசனாக இருக்கிறோமே என்ற பெருமையில் இருக்கும் அரசன்,  தற்பெருமைக்காரன், குடிகாரன் புவியியலாளன், பிஸினஸ்மேன் எனக் குட்டி இளவரசன் பயணத்தில் சிலரைச் சந்தித்த பிறகு, அவனுக்குத் தோன்றும் உண்மை, “பெரியவர்கள் உண்மையிலேயே, விசித்திரமானவர்கள் தாம்”   

“பழக்கப்படுத்திக் கொண்ட பொருட்களைத் தான், தெரிந்து கொள்ள முடியும்; மனிதர்களுக்கு இப்போதெல்லாம்,, எதையும் தெரிந்து கொள்ள நேரம் இருப்பதில்லை.  தயார் செய்த பொருட்களையே, கடைகளில் வாங்குகிறார்கள்.  ஆனால் கடைக்கார்ர்கள் நண்பர்களாக இல்லாததால், மனிதர்களுக்கு நண்பர்களே இல்லை”.  .  

 “நீ விண்மீன் ஒன்றில் இருக்கும், ஒரு மலரைக் காதலிப்பாயானால், இரவில் ஆகாயத்தைக் காண்பது,, இனிமையாக இருக்கும்.  எல்லா விண்மீன்களும் அப்போது பூத்துக் குலுங்கும்”  என்பவை நான் ரசித்த  வாசகங்களில் சில.  

குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், இரு வேறு வாசிப்பனுபவத்தைத் தரும் சிறந்த நாவல்.

வகைசிறுவர் நாவல்
ஆசிரியர்அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (Antoine de Saint-Exupery) 
பிரெஞ்சிலிருந்து தமிழில்: வெ.ஸ்ரீராம் &  ச.மதனகல்யாணி
வெளியீடுக்ரியா பதிப்பகம்
விலைரூ 125/-
குட்டி இளவரசன் (The Little Prince) சிறுவர் நாவல்

Share this: