சுட்டி உலகத்துக்கு இன்று நான்காம் ஆண்டு இனிய பிறந்த நாள்! சுட்டி உலகம் துவங்கி நேற்றுடன் நான்காண்டு நிறைவு பெற்று, இன்று ஐந்தாம் ஆண்டு துவங்குகிறது.
2021ஆம் ஆண்டில் இந்த வலைத்தளத்தைத் துவங்குவதற்கு முன், தமிழில் என்னென்ன தலைப்புகளில் சிறுவர் நூல்கள் கிடைக்கின்றன? தற்காலத்தில் எழுதும் எழுத்தாளர்கள் யார் யார்? எந்தெந்தப் பதிப்பகங்கள் தமிழில் சிறார் நூல்களை வெளியிடுகின்றன? தமிழில் குழந்தைகள் படிக்க வேண்டிய சிறந்த சிறுவர் நூல்கள் என்னென்ன? என்று இணையத்தில் தேடிய போது விபரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஆங்கில நூல்களைப் பரிந்துரை செய்யும் வலைத்தளங்கள் பல இருந்தன.
எனவே நம் தாய்மொழித் தமிழில் வெளியாகும் நூல்களை வாசித்துப் பரிந்துரை செய்து, குழந்தைகளின் வாசிப்புக்கு வழிகாட்ட வேண்டும் என்று தோன்றிய எண்ணமே, ‘சுட்டி உலகம்’ துவங்க வழிவகுத்தது. அதற்குப் பிறகு பல சிறார் நூல்களை வாங்கி, அவற்றை வாசித்து நூல் அறிமுகம் செய்யத் துவங்கினோம். இன்று நூற்றுக்கு மேற்பட்ட நூல் அறிமுகங்கள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. மேலும் இந்நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் பற்றிய விபரங்களுடன், தற்கால எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு வாசிப்பில் ஈர்ப்பை ஏற்படுத்த, அவர்களின் வயதுக்கேற்ற நூல்களை வாசிக்கக் கொடுக்க வேண்டும்; இல்லையேல் குழந்தை வாசிப்பை வெறுக்கத் துவங்கிவிடும். புத்தகத்தைக் கண்டாலே ஓடத் துவங்கிவிடும். எனவே தான் இந்தத் தளத்தில் குழந்தைகளின் வயது வாரியாக புத்தக அறிமுகம் உள்ளது.
ஸீரோவில் ஆரம்பித்த இந்த வலைத்தளப் பார்வையின் (Views)எண்ணிக்கை, இன்று 80000ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்குத் தமிழைத் திருத்தமாக உச்சரிக்கச் ‘சுட்டி உலகம்’ காணொளியும் துவங்கி, அதில் பாடல்களை ஒலிபரப்புகிறோம்.
இவை குழந்தைகளைக் கவரக்கூடிய சந்தமும், இசையும், அனிமேஷனும் கொண்ட பாடல்கள். இந்தப் பாடல்களுள் ‘யானை வருது’ என்ற பாடல், ஒரு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் பார்வையைப் பெற்றிருக்கிறது என்பது வியப்பூட்டும் மகிழ்ச்சியான செய்தி! குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்த பாடலிது!
வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சுட்டி உலகத்துக்கு மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்னும் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் பிறந்த நாட்களைச் ‘சுட்டி உலகம்’ கொண்டாட இனிய வாழ்த்துகள்!
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.