சின்னஞ்சிறு பெண்

Littlewomen_pic

சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பு இருந்தாலும் இந்தக் கதையில் வரும்  பெண்கள் பதின் பருவத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இதை ‘யங் அடல்ட்’ என்ற சொல்லப்படும் இளையோர் நாவல் வகையில் சேர்க்கலாம்.

இந்த நாவலில் நான்கு சகோதரிகள் இருக்கின்றார்கள். கதாசிரியர் லூயிசாவின் சொந்த வாழ்க்கையின் கூறுகளைக் கொண்டிருப்பதால் இந்நாவலின் 50 சதவீதம் லூயிசாவின் சுயசரிதை என்று கூறப்படுகிறது. ஏனெனில் லூயிசா வீட்டிலும் நான்கு பெண்கள். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான இரண்டாவது பெண் ஜோ எழுத்தாளர். கோபம், துடுக்குத்தனம், முரட்டுத்தனம் ஆகிய குணங்களைக் கொண்டவர், புத்தகம் வாசிப்பதில் அதிகம் நாட்டமுள்ளவர். கதாசிரியர் லூயிசாவின் மறு வார்ப்பாகத் தான் இந்த ஜோ கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.   

150 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நாவலில் ஆசிரியர் பாரம்பரியமான பிற்போக்கான பெண் கதாபாத்திரங்களுக்குப் பதிலாக காத்திரமான பெண் கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். இதை வாசிக்கும் பெண் குழந்தைகள் வாழ்வில் ஜோ கேரக்டர் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேசனாக இருக்கும்.

கதையில் பெண்களின் அப்பா போர் முனையில் இருக்கிறார். அப்பா வீட்டில் இல்லாத கிறிஸ்துமஸ் விழாவுடன் நாவல் துவங்குகிறது. ஏழ்மையான குடும்பம். “அன்பளிப்புகள் இல்லாத கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் அல்ல” என்று முணுமுணுத்தாள் ஜோ என்று இந்தக் கதை துவங்குகிறது. பதின்வயது பெண்களுக்குப் புதிய உடைகளோ அன்பளிப்புகளோ இல்லாத கிறிஸ்துமஸ் பண்டிகை.

சகோதரிகள் நால்வரும் தங்களுக்குப் பரிசு ஏதும் வாங்காமல் தங்களது சேமிப்பில் அம்மாவுக்காக ரகசியமாகப் பரிசு வாங்குகிறார்கள். அம்மா மீது அவ்வளவு பாசத்தோடு இருக்கிறார்கள். அப்பா தங்கள் கூட இல்லையே என்று ஏங்குகிறார்கள். பாசமான குடும்பம்.  

அம்மாவும் மிகவும் நல்ல பெண்மணி. கிறிஸ்துமஸ் காலை உணவை ஆறு குழந்தைகள் உள்ள ஒரு ஏழை குடும்பத்துக்குக் கொடுக்கச் சொல்கிறார். சகோதரிகளுக்குப் பசி. ஆனாலும் அம்மாவின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கிறார்கள். காலை உணவை அந்த ஏழை தாய்க்குக் கொடுத்து விட்டு ரொட்டியும் பாலும் மட்டுமே சாப்பிடுகிறார்கள் என்பதை வாசிக்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் இவர்கள் இப்படி கொடுத்ததை அறிந்த பக்கத்து வீட்டு பணக்கார முதியவர் மனம் நெகிழ்கிறார். அன்று மாலை இவர்களுக்கு விதவிதமான கேக் வகைகள், ஐஸ்கிரீம், பூங்கொத்துகளை அனுப்புகிறார். இந்த நாவலை வாசிக்கும் சிறுவர்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும்; மற்றவர்க்குப் பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற வாழ்வியல் நெறிகளை அவர்கள் அறியாமலே அறிந்து கொள்வார்கள்.

சகோதரிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் பிறகு ராசியாகிப் போவதும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் விஷயம் தான். அதனால் தான் இந்த நாவல் எழுதப்பட்டு இருநூறு ஆண்டுகளாகியும் இன்றும் வாசிக்கப்படுகிறது. கடைசிப் பெண் ஆமி. வெளியே தன்னை அழைத்துச் செல்லவில்லை என்று அக்கா ஜோ மேல் கோபப்படுகிறாள். அதற்குப் பழிவாங்க எண்ணி ஜோ கதைகள் எழுதி வைத்திருந்த நோட்டை எரித்துவிடுகிறாள். செய்தியறிந்து ஜோ ரொம்பவும் கோபப்படுகிறாள். “உன்னை நான் என்றும் மன்னிக்கவே மாட்டேன்” என்கிறாள். ஆனால் பனிச்சறுக்கு விளையாட்டின் போது உருகிய பனியில் மூழ்கிவிட்ட ஆமியைக் காப்பாற்றப் போராடுகிறாள். இதைப் போன்ற செவ்வியல் நாவல்கள் வாசிக்கும் குழந்தைகளின் மனம் பண்படும்; விசாலமாகும்.

மேலும் பெத் என்ற மூன்றாவது சகோதரிக்கு ஏற்படும் பரிதாபமான முடிவையும் வாசிக்கும் சிறுவர்க்கு மகிழ்ச்சி ஏற்படுமாறு இதில் மாற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்.  இந்தக் கதாபாத்திரங்கள் அமெரிக்கப் பெண்களாக இருந்தாலும், கதையை வாசிக்கும் போது நம்மூரில் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு சகோதரிகள் கதையிது என்ற உணர்வு ஏற்படுகிறது.

வகை – மொழி பெயர்ப்புஇளையோர் நாவல்
ஆசிரியர் – ஆங்கிலம் –
தமிழாக்கம் –
லூயிசா மே ஆல்காட்
சுகுமாரன்
வெளியீடு:-வானம் பதிப்பகம், சென்னை-89. +91 91765 49991.
விலைரூ 100/-

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *