‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ வென்ற நூல்வரிசை -3

Marapachi_Rahasiyam_pic

மரப்பாச்சி சொன்ன ரகசியம் – சிறுவர் நாவல்

ஆசிரியர் யெஸ்.பாலபாரதி  

2020 ஆம் ஆண்டுக்கான ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்’ என்ற சிறுவர் நாவலுக்குக் கிடைத்தது. தற்போது அதிகரித்து வரும் குழந்தைகளின் பாலியல் வன்முறை குறித்துக் கதை வழியே குழந்தைகளுக்குச் சொல்லும் இந்நாவல், தமிழில் முதல் முயற்சி. குழந்தைக்குத் தன் உடல் தன் உரிமையென்றும், பாதுகாப்பற்ற தொடுதல் நடந்தால், அது பற்றி உடனே பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வூட்டும் சிறந்த நாவல். 

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூக செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர்.  குழந்தைகளைப் பாதிக்கும் ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, அது பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றார்.

ஷாலு என்ற சிறுமிக்கு அவள் பாட்டியிடமிருந்து ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது.  திடீரென்று ஒரு நாள் அது பேசத் துவங்குகிறது. தன் பெயர் இளவரசி என்றும், அவளுக்குத் தான் உதவியாக இருப்பேன் என்றும் சொல்கிறது. 

அது பேசுவதைப் பார்த்து முதலில் பயந்தாலும், பின்னர் மரப்பாச்சியை அவளுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது.  அதை விட்டுப் பிரிய மனமின்றி எங்குச் சென்றாலும், அதையும் தன்னுடன் எடுத்துச் செல்கின்றாள் ஷாலு. பள்ளியில் அவள் தோழிகளிடத்திலும், நம்ப முடியாத பல சாகசங்களை அது செய்கிறது.

ஷாலுவின் தோழி பூஜாவிற்கு வெளியில் சொல்ல முடியாத ஒரு சங்கடம் நேருகின்றது.  அதுவும் வீட்டுக்குக் கீழே குடியிருக்கும் தாத்தாவால் நேருகின்றது.  “விஷயத்தை வெளியில் சொன்னால், உன்னைத் தான் அடிப்பார்கள்; பள்ளிக்குக் கூட அனுப்பாமல், வீட்டுக்குள் உன்னை வைத்துப் பூட்டிவிடுவார்கள்” என்று அவளை அவர் பயமுறுத்தி வேறு வைத்திருக்கிறார்.   

அதனால் தன் அம்மாவிடம் கூட பிரச்சினையைச் சொல்ல முடியாமல் மன அழுத்தத்துக்கும், மனவேதனைக்கும் உள்ளாகிறாள் பூஜா.  ஷாலுவின் மூலமாகப் பூஜாவின் பிரச்சினையை அறிந்து கொள்ளும் மரப்பாச்சி அவளுக்குப் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றி விளக்குகிறது.

“உள்ளாடை அணிந்திருக்கும் அந்தரங்கமான பகுதியை யாரேனும் தொட்டால், உடனே சத்தம் போட்டுக் கத்தணும்; அந்த இடத்தை விட்டு உடனே ஓடி வந்துடணும்; அம்மாவிடம் அது பற்றி உடனே சொல்லணும்; அம்மாக்கிட்ட சொல்லக் கூடாதுன்னு, மிரட்டுனதையும் சொல்லணும்” என்று சொல்லி மரப்பாச்சி அவளுக்குத் தைரியம் கொடுக்கிறது.

மரப்பாச்சி சொன்னதைக் கேட்டு, பூஜாவிற்குத்  தைரியம் வருகிறது. அம்மாவிடம் சொல்வதால், அந்தப் பிரச்சினையிலிருந்து அவளுக்குத் தீர்வும் கிடைக்கிறது.  அந்தத் தாத்தா பயமுறுத்தியது போல் தன்னை வீட்டுக்குள் பூட்டி வைக்கவில்லை; அடிக்கவில்லை என்று பூஜா தெரிந்து கொள்கிறாள். 

இந்தச் செய்தி இந்நாவலை வாசிக்கும் குழந்தைகளுக்கும் போய்ச் சேர்ந்து, அவர்கள் விழிப்புணர்வு பெறுவது நிச்சயம்.  முன்பை விட தற்போது குழந்தைகளின் மீதான வன்முறை அதிகரித்திருக்கிறது.  அதுவும் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான நபர்களாலேயே இது நிகழ்கிறது.  இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு அவர்கள் உடலைப் பற்றியும், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் பற்றியும் சொல்லிக் கொடுப்பது நம் கடமையாகிறது.

 “இது ஏதோ ஒரு பூஜாவின் பிரச்சினை மட்டுமல்ல; நம்மிடையே வெளியே தெரியாமல் பல பூஜாக்கள் உண்டு. அவர்களுக்கு உதவுவதும், தைரியம் கொடுப்பதும் கூட நமது பணி தான். இதை வெறும் கதையாகக் கடந்து போய்விட வேண்டாம்.  இது பற்றி உங்கள் அம்மா  அப்பாவிடமும், தோழிகளிடமும் மனம் திறந்து பேசுங்கள். தெளிவு கிடைக்கும்” என்று தம் முன்னுரையில் ஆசிரியர் கூறியிருக்கிறார்.

நாவலின் இடையிடையே இக்கதையையொட்டிக் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய சில பொது அறிவுச் செய்திகளையும், பெட்டிச் செய்திகளாகக் கொடுத்துள்ளமை சிறப்பு. எடுத்துக் காட்டாக மரப்பாச்சி பொம்மை செஞ்சந்தனம் அல்லது கருங்காலி போன்ற மருத்துவ குணமுடைய மரங்களில் செய்யப்படுவதால் சின்னக் குழந்தைகள் அதை வாயில் வைத்தாலும் கெடுதல் ஏற்படாது என்பது ஒரு பெட்டிச் செய்தி.

உலக புத்தக நாளான 23/04/2022 அன்று, ஆசிரியர் யெஸ்.பாலபாரதி வெளியிட்ட ஓர் அறிவிப்பில், “பாலியல் கொடுரங்களுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் தங்களைத் தாங்களே குற்றவாளிகள் என்று நினைக்கின்றனர். அப்படி எண்ணத் தேவையில்லை என்பதைப் பிள்ளைகளுக்குப் புரியும் மொழியில், ‘இந்த மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ கதையில் கூறி உள்ளேன்.  குழந்தைகள் மீது சமூகத்தின் தீவிர கவனம் கோரும் ஆவணம் இது. இச்சிறார் நாவல் இன்னும் பல நூறு குழந்தைகளிடம், பெற்றோரிடம், ஆசிரியர்களிடம், பல சமூகத் தளங்களைச் சேர்ந்தவர்களிடம் சென்று சேரவேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன். எனவே ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்’ என்னும் இப்படைப்பைத் தமிழ்நாட்டு மக்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்; இன்று முதல் தமிழில் எவரும் இந்தச் சிறார் நாவலைப் பதிப்பித்துக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

வானம் பதிப்பகம், சென்னை – 600089 செல் +91 91765 49991.

விலை ரூ 60/-

Share this: