தலையங்கம் – பிப்ரவரி 2025

Blackread_pic

அனைவருக்கும் அன்பு வணக்கம். 2025 ஜனவரி மாதம் சென்னை புத்தகத் திருவிழா முடிந்து, அதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் புத்தகத் திருவிழா நடந்தவண்ணம் உள்ளது. உங்கள் ஊருக்கு அருகாமையில் நடக்கும் புத்தக விழாவுக்கு உங்கள் குழந்தைகளை அவசியம் அழைத்துச் சென்று, புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்.

என்னென்ன தலைப்புகளில் புத்தகங்கள் வந்திருக்கின்றன என்பதை, அவர்கள் தலைப்புகளை வாசித்துத் தெரிந்து கொள்ளட்டும். அவர்கள் விரும்புகிற புத்தகங்களை வாங்கி வாசிக்கக் கொடுங்கள். உங்கள் விருப்பத்தை அவர்கள் மேல் திணிக்காமலிருப்பது நல்லது. அக்பர் பீர்பால், பஞ்ச தந்திரக் கதைகள் போன்ற பழையன கழிந்து நவீன அறிவியல் சிந்தனையுடன் கூடிய புதிய புத்தகங்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள். 

குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதும் நூல்களும் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இது வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. கதைப் புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளுக்குக் கற்பனா சக்தி அதிகமாகும். நாளாக ஆக அவர்களுக்கு எழுதும் திறனும் கைவரப் பெறும். கதை வாசிக்கும் குழந்தைகளின் படைப்பூக்கம் தூண்டப்பெற்று வருங்காலத்தில் அவர்கள் சிறந்த படைப்பாளர்களாக மிளிர்வது உறுதி.

உ.வே.சா அழிந்து போகும் நிலையில் இருந்த மூவாயிரத்துக்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும், கையெழுத்து பிரதிகளையும் பல ஊர்களுக்குப் பயணம் செய்து அரும்பாடுபட்டுச் சேகரித்தார். சேகரித்தவற்றை ஆராய்ந்து, பிழை திருத்தித் தொகுத்து நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை அச்சிலேற்றினார். இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். உ.வே.சாவின் தமிழ்த் தொண்டுக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். அவரது பிறந்த நாள் ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி’ நாளாகக் கொண்டாடப் படுமென்று சென்ற ஆண்டு தமிழ் நாடு முதல்வர் அறிவித்து இருக்கிறார்.  

சுட்டி உலகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறார் நூல்களின் அறிமுகம் உள்ளது. வயது வாரியாகப் புத்தக அறிமுகங்கள் உள்ளன. உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ற நூலை வாங்க இந்த அறிமுகம் உதவும். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகம் வாங்கிப் பரிசளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ2152 கோடி நிதியை உ.பிக்கும் குஜராத்துக்கும் பகிர்ந்து அளித்திருக்கிறது. ‘PM SHRI’ திட்டத்தில் இணைய வேண்டும்’ என்ற ஒன்றிய அரசின் நிபந்தனையைத் தமிழ்நாடு ஏற்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான அத்திட்டத்தில் இணைந்தால், மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால் தமிழ்நாடு அரசு எதிர்த்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய கல்வி நிதியை மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு மாற்றியிருக்கிறது.

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *