பால சாகித்ய புரஸ்கார் விருது – 2021 – ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’

Ammavukku_makal

நாற்பதாண்டு காலமாகக் கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து எழுதி வருகின்ற மு.முருகேஷ் அவர்களுக்கு, 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்குச் சுட்டி உலகம் சார்பாக, வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

இவர் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற சிறுவர் கதை நூலுக்கு இவ்விருது கிடைத்துள்ளது. “நாளைய சமுதாயத்தின் சிற்பிகளான குழந்தைகளுக்கு எழுதுவதென்பது, மிகவும் மனநிறைவு தருகிற விஷயம்” என்று சொல்லும் இவர், இதுவரை குழந்தைகளுக்காக பத்து கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் தந்துள்ளார். இவரது குழந்தைகளுக்கான படைப்புகள் ‘துளிர்’, ‘வண்ணக்கதிர்’, ‘குழந்தைகள் பூங்கா’ ‘வெற்றிப்பாதை’ ‘மாயா பஜார்’ போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ ‘தவிட்டுக்குருவியும் தங்கராசு மாமாவும்’ ‘பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்‘ ‘நல்லமுத்து பாட்டிக்கு நாவல் மரம் சொன்ன கதை’ ஆகியவை விருது பெற்ற சிறுவர் நூல்கள். கிராமப்புறக் குழந்தைகளின் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்தில் நோக்கில், 100 க்கும் மேற்பட்ட இரண்டு பக்க படக்கதை அட்டைகளைத் தயாரித்து அளித்திருக்கிறார். இவரது ‘குழந்தைகள் சிறுகதைகள்’ எனும் நூல், தமிழக அரசின் ‘புத்தகப் பூங்கொத்து’ திட்டத்தில் தேர்வாகி, 32000 அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

தமிழக அரசின் சமச்சீர் பாடத்திட்டத்திலும், பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் பிறந்த இவர், தற்போது வந்தவாசியில் வசித்து வருகிறார்.

மேலும் பல விருதுகள் பெற வேண்டும் என மு.முருகேஷ் அவர்களைச் சுட்டி உலகம் சார்பாக வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்!

Share this: