2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருதை ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற சிறார் நாவலுக்காக, விஷ்ணுபுரம் சரவணன் பெற்றிருக்கிறார். அவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய வாழ்த்துகள்!
இதைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது. இயற்கை, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த ஃபேண்டசி நாவல், 2019 ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியத்துக்கான ஆனந்த விகடன் பரிசை வென்றது.
நந்திமங்கலம் அரசுப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி ஆண்டு விழாவுக்காக ஒத்திகை பார்க்கிறார்கள். திடீரென்று ஓர் அதிசயம் நிகழ்கின்றது. ஓவியா என்ற மாணவிக்கு ஒற்றைச் சிறகு முளைக்கிறது! மற்றவர்களின் கண்கள் வழியாக அவர்கள் கனவுக்குள் போய், இரகசியத்தைத் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் அவளுக்குக் கிடைக்கின்றது.
ஆண்டு விழாவுக்குத் தலைமையேற்க கலெக்டர் வருகை தரவிருக்கிறார். ஒற்றைச் சிறகு அதிசயத்தைப் பயன்படுத்தி அதையே கலைநிகழ்ச்சியாக நடத்திக் கலெக்டரை அசத்த நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போல் செய்ய முடியாமல் முக்கியமான பொருள் திருட்டு போகின்றது. அதனைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் சில புதிர்களை அவர்கள் விடுவித்தாக வேண்டும். அவர்களுடைய முயற்சி வெற்றி பெற்றதா? என்பது மீதிக்கதை.
திருட்டுப் போன பொருளைத் தேடத் துவங்கும் போது தமிழகத்தின் முக்கியமான அரசியல், சூழல் பிரச்சினைகளை மாணவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். அவற்றைத் தெரிந்து கொள்ள அவர்களுக்கு உதவியாக இருப்பவர், பள்ளியின் பியூன் தாத்தா கதிரேசன்.
செயற்கை உரங்களைக் கொட்டி நிலத்தை நஞ்சாக்கியதன் விளைவாக உழவரின் நண்பனான மண்புழு இல்லாமல் போய்விட்டது; குடிதண்ணீர் நிறம் மாறிக் குடிப்பதற்கு லாயக்கில்லாமல் போனதற்கு யார் காரணம்? நிலத்தடி நீர் வெகு ஆழத்துக்கு ஏன் போனது? கார்பரேட் கம்பெனிகள் இயற்கையைச் சுரண்டுவதற்கு எதிராக, மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்பதையெல்லாம், இந்த ஃபேண்டசி நாவல் வழியாக வாசிக்கும் சிறுவர்களுக்கு ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.
பள்ளி மாணவர்கள் தங்கள் கைகளில் கட்டிச் சென்ற சாதிக்கயிறு குறித்தும் சாதிக்கலவரம் குறித்தும், விழிப்புணர்வூட்டும் வகையில் இவர் எழுதிய ‘கயிறு’ கதையும், ‘நீலப்பூ’ கதையும் தமிழ்நாடு முழுக்க மிகவும் பிரபலமானவை.
விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு மீண்டும் இனிய வாழ்த்துகள்!
வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.