விஷ்ணுபுரம் சரவணன்

Vishnupuram_Saravanan

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்காகத் வெளியிடும்’தேன்சிட்டு’, ‘ஊஞ்சல்’ என்ற இதழ்களின் இணையாசிரியராக இருக்கின்றார். 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை,சிறார் இலக்கியம், கட்டுரை என்ற வகைமையில் 17 நூல்களை எழுதியுள்ளார்.

‘ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற சிறுவர் நாவலுக்காக 2025ஆம் ஆண்டு சாகித்ய பாலபுரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார். இது ஏற்கெனவே விகடனின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறார் இலக்கிய விருதைப் பெற்றது. இதைப் பாரதி புத்தகாலயத்தின் ஃபுக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது.

‘வாத்து ராஜா’, ‘கதைகதையாம் காரணமாம்’, ‘வானத்துடன் டூ’, ‘வித்தைக்காரச் சிறுமி’ ‘எலியின் வேட்டை’ ஆகியவை இவர் எழுதிய பிறநூல்கள். பிறப்பை அடிப்படையாக வைத்துச் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வைக் கதையாகச் சொல்லும் ‘நீலப்பூ’ என்ற சிறுவர் நாவல், 2022 ஆம் ஆண்டுக்கான படைப்பு இலக்கிய விருதை வென்றது. மேலும் தமுஎகச, வாசகசாலை, விடுதலை கலை இலக்கியப் பேரவை, எஸ்.ஆர்.வி.கல்விக்குழுமம் ஆகியவை வழங்கும் விருதுகளைப் பெற்றவர்.

பள்ளிகளில் சிறுவர்கள் கைகளில் கட்டிச் சென்ற சாதிக்கயிறு குறித்து இவரெழுதிய ‘கயிறு’ என்ற கதை, தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களிடம் பரவலான கவனம் பெற்றுப் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின.

நூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளை நேரில் சந்தித்துக் கதைகள் குறித்து உரையாடுகின்றார். அவர்களுக்குக் கதை எழுதும் பயிற்சியும் கொடுக்கிறார். ‘நானும் கதாசிரியரே’ என்ற இவரது சிறுவர் கதை எழுதுவதற்கான வழிகாட்டி நூலை இந்து தமிழ் திசை வெளியிட்டுள்ளது.

Share this: