“ஒவ்வொரு குழந்தையும் எவ்வித வன்முறையும் இல்லாத மகிழ்ச்சியான உலகில், ஒரு சிறு பறவையைப் போல் பறந்து திரிந்து வாழ்க்கையைக் கொண்டாடிக் களிக்க வேண்டும் என்பதே என் பெருங்கனவு” என்று இந்நாவலின் முன்னுரையில் கூறியிருக்கிறார் ஆசிரியர்.
கூட்டம் நிறைந்த பேருந்தில் நெருக்கமாக நின்று கொண்டு பயணம் செய்வது பெண்களுக்குக் கொடுமையான அனுபவம். அந்த இக்கட்டான சமயத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இளம் வயது பெண்கள் மீதும், பெண் குழந்தைகள் மீதும் உரசுவது வக்கிரப் புத்தி கொண்ட ஆண்கள் சிலரின் பழக்கம்.
நிலா ஒன்பதாம் வகுப்பு மாணவி. முதல் அத்தியாயம் பேருந்துப் பயணத்தில் ஆரம்பிக்கிறது. நிலா பெண்கள் மீது உரசும் ஒருவனை ஊக்கினால் குத்திக் காயப்படுத்துவதோடு, செருப்புக் காலால் அவன் காலை நசுக்கவும் செய்கிறாள். வலி பொறுக்கமாட்டாமல் அவன் நகர்ந்து படிக்கட்டு அருகே போய் நின்றுவிடுகிறான். இப்படி இந்நாவலின் நாயகியான நிலாவைப் பிரச்சினையைத் தைரியமாக எதிர்கொள்ளும் துணிச்சல் மிகுந்தவளாக ஆசிரியர் படைத்திருக்கிறார். இவள் தான் துணிச்சல்காரி!
பெண் குழந்தைகள் போலவே ஆண் குழந்தைகளும் பாலியல் தொந்திரவால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை ஜோபின் கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். எளிதில் யாரையும் நம்பி ஏமாந்து விடும் அப்பாவி கதாபாத்திரம் மதுமிதா. தெரியாதவர்களோ, முன் பின் பழக்கமில்லாதவர்களோ ஏதாவது தின்பண்டம் கொடுத்தால் வாங்கித் தின்னக் கூடாது; அது ஆபத்தை விளைவிக்கும் என்பதை இந்த மதுமிதா கதாபாத்திரம் மூலம் இந்நாவலை வாசிக்கும் சிறாரை எச்சரிக்கிறார் ஆசிரியர்.
இந்நாவலின் கடைசி அத்தியாயமும் பேருந்துப் பயணத்தில் தான் முடிகிறது. நிலா தன் இடுப்பைக் கிள்ளிய ஒருவனை ஓங்கி அறைந்ததோடு காலால் ஓர் உதையும் விடுகிறாள். கராத்தே கற்ற அவளது உதையால் அவன் சுருண்டு பேருந்திலிருந்து வெளியே போய் விழுகிறான். அவள் ஆசிரியரும், பேருந்தில் இருந்தவர்களும் அவள் தைரியத்தைப் பாராட்டுகின்றனர்.
பெண் குழந்தைகள் பாலியல் சீண்டல்களைச் சகித்துக் கொண்டு அமைதியாக இருக்கக் கூடாது; கராத்தே போன்ற தற்காப்பு கலைகளைப் பெண்கள் அவசியம் கற்க வேண்டும்; துணிச்சலாகத் தங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்துகளை இந்நாவலின் மூலம் உரக்கச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். பதின்பருவத்தினர் அவசியம் இந்நாவலை வாசிக்க வேண்டும்.
| வகை | இளையோர் நாவல் |
| ஆசிரியர் | ஈரோடு சர்மிளா |
| வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18. |
| விலை | ரூ 80/-. |
