பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் தமிழ் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மிகக் குறைந்த விலையில் ஏற்கெனவே 23 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில் இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகியுள்ளது.
இதில் இரண்டு கதைகள் உள்ளன. ‘ஒளி வீசிய குடை’ என்பது முதல் கதை. ஒரு காட்டில் காளான்கள் முளைத்து இருக்கின்றன. ஒரு நாள் திடீரென்று மழை பெய்கிறது. மழையில் நனையாமல் தப்பிக்க உணவை எடுத்துச் சென்ற எறும்புகள் காளான்களுக்கு அடியில் ஒதுங்குகின்றன. இரவில் காளான் குடைகள் மஞ்சள் பச்சை வண்ணங்களில் ஒளிர்வதைப் பார்த்து எறும்புகள் வியக்கின்றன. அவை ஒளி வீச என்ன காரணம் என்பதை இப்புத்தகம் வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
‘யானைக்கு உதவிய கிளி’ என்பது இரண்டாவது கதை. காட்டில் குறுக்கே ரயில் தண்டவாளம் இருக்கின்றது. ரயில் வருவது தெரியாமல் பாதையைக் கடக்கும் யானைகள் ரயிலில் அடிபடுகின்றன. அதைப் பார்த்த கிளியும் மற்ற பறவைகளும் யானைகள் ரயிலில் அடிபடாமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு முடிவு எடுக்கின்றன. அதற்குப் பிறகு எந்த யானையும் ரயிலில் அடிபடவில்லை. யானைக்குக் கிளி எப்படி உதவியது என்று தெரிந்து கொள்ள இப்புத்தகம் வாங்கி வாசியுங்கள்.
| வகை | சிறார் வாசிப்பு நூல் |
| ஆசிரியர் | கன்னிக்கோவில் இராஜா |
| வெளியீடு | பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்+ புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18. |
| விலை | ரூ 20/-. |
