தலையங்கம்-மார்ச் 2025

YoungEinstein_pic

வணக்கம். 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்! தேர்வை நல்லவிதமாக எழுதி முடித்து எதிர்காலத்தில் உங்களுக்கு விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கச் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய வாழ்த்துகள்!

இந்தாண்டு மார்ச் 8ஆம் தேதி உலகம் எங்கும் மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுப் பெண் ஆளுமைகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டன. வாட்சப்பில் மகளிர் நாளுக்கான வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்தன.

பெற்றோர் பெண் என்பவள் போகப் பொருள் அல்ல என்பதை, ஆண் குழந்தைகளுக்குச் சிறுவயது முதலே சொல்லி வளர்ப்பது அவசியம். பெண்ணைச் சக உயிராய்ப் பாவித்து, அவர்களின் உணர்வுகளை மதித்துத் தோழமையுடன் நடத்த வேண்டும் என்பதை, ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோர் சொல்லி வளர்க்க வேண்டியது, இக்காலத்தின் கட்டாயம்.

20ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இயற்பியல் மேதையாகக் கொண்டாடப்படும் ஐன்ஸ்டீன் மார்ச் மாதம் பிறந்தவர். ஒளி மின் விளைவைக் (Law of the Photoelectric effect) கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், குவாண்டம் எந்திரவியல்(Quantum Mechanics) சார்பு கோட்பாடு (special theory of relativity)ஆகியவற்றில் இவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காகவும் 1921இல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மகாத்மா காந்தியை இவருக்கு மிகவும் பிடிக்கும். “வருங்காலத் தலைமுறைக்கு இவர் தாம் ரோல் மாடல்’ என்று காந்தியைப் புகழ்ந்தவர் ஐன்ஸ்டீன்.

ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் மேதைகளின் வாழ்க்கை வரலாறுகளை மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டும். பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பே மாணவர்களின் அறிவியல் சிந்தனையைத் தூண்டி அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். குழந்தைகள் எதிர்காலத்தில் பன்முகத்திறமை உள்ள ஆளுமைகளாகத் திகழ இளம்வயது முதலே வாசிப்பைத் துவங்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற நூல்கள் சுட்டி உலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த பல்வேறு புத்தகங்களை வாங்கி வாசிக்கக் கொடுத்து அவர்கள் படைப்புத் திறமையை வெளிக்கொணர வேண்டும்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *