தலையங்கம்-ஆகஸ்ட் 2024

Editorialaug_pic

எல்லோருக்கும் அன்பு வணக்கம்.

இந்த ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா நம் இதயங்களைக் கவர்ந்த விளையாட்டு வீரராகத் திகழ்கின்றார். ஈட்டி எறிதல் போட்டியில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். யாருமே எதிர்பாராதவகையில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் ஈட்டி எறிந்து உலகச் சாதனை படைத்ததோடு, தங்கமும் வென்றார்.

அர்ஷத் நதீம் மிகவும் ஏழை. ஏழெட்டு ஆண்டுகளாக தாம் பயன்படுத்திய ஈட்டி சர்வதேசப் போட்டிகளில் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமாகிவிட்டதென்றும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன், யாராவது புது ஈட்டி வாங்கித் தந்து உதவுமாறும், நதீம் 2024 மார்ச் மாதம் பாகிஸ்தான் தேசிய ஃபெடரேசனுக்கும், பொது மக்களுக்கும் சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இருவரும் போட்டி முடிந்து பதக்கங்களைப் பெற்ற பின், நண்பர்களாக இணைந்து நின்று அவரவர் கொடிகளைப் போர்த்தியவாறு கைகுலுக்கும் ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கின்றது. உண்மையான விளையாட்டு உணர்வு (Sportsmanship)என்பது வெற்றி, தோல்வியைப் பற்றிக் கவலைப்படாதது; நாடு, மதம், இனம். மொழி போன்ற எல்லைகளைக் கடந்தது; மனிதநேயமிக்கது என்பதை இவர்களின் நட்பு, உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது. நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றிருந்தாலும், அர்ஷத் மீதான இவரது மனிதநேயம், நட்பு காரணமாக இந்தியாவின் தங்க மகனாகக் கொண்டாடப்படுவது நிச்சயம்.         

‘சுட்டி உலகம்’ பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பை ஊக்குவிக்கத் துவக்கப்பட்டது. கதைகள் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி, அவர்கள் படைப்புத் திறனை வெளிக்கொண்டு வரும் என்பதால், அவர்கள் கதைகளை அவசியம் வாசிக்க வேண்டும். எனவே பெற்றோர் குழந்தைகளின் வயதுக்கேற்ற கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். சுட்டி உலகத்தில் வயதுக்கேற்ற புத்தக அறிமுகங்கள் உள்ளன. குழந்தைகளின் வயது, ரசனைக்கேற்ற புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்க இந்த அறிமுகம் உதவும்.

கோவையிலும், புதுக்கோட்டையிலும் புத்தகத் திருவிழா நடந்து முடிந்து தற்போது ஈரோட்டில் நடக்கிறது. வாய்ப்புள்ள பெற்றோர் குழந்தைகளைப் புத்தகத் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளின் போது புத்தகப் பரிசு கொடுக்கும் வழக்கத்தை ஆரம்பியுங்கள்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: