பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் தமிழ் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மிகக் குறைந்த விலையில் ஏற்கெனவே 23 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில் இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகியுள்ளது.
இதில் இரண்டு கதைகள் உள்ளன. ‘ஆயிரம் வாசல்’ என்ற முதல் கதையில் குட்டிப் பெண் கோதைக்கு ஒரு நாள் இரவில் பாட்டி கதை சொல்கிறார். “உன் இமையில் ஒரு வாசல் இருக்கிறது. நீ தூங்கும் போது அந்த வாசல் வழியாகத் தேவதை வந்து நல்ல கனவு தருவார்” என்கிறார் பாட்டி. வியப்படைந்த கோதை ‘இந்த உலகில் வேறு என்னென்ன வாசல்கள் இருக்கின்றன?’ என்று யோசிக்க ஆரம்பிக்கிறாள். முடிவில் வகுப்பறைக்கு ஒரே ஒரு வாசல்; வெளியே உலகில் கற்க ஆயிரம் வாசல் உள்ளன என்று பாட்டி மூலம் அறிந்து கொள்கிறாள்.
இரண்டாவதாக இடம் பெற்றுள்ள ‘ஓவியச் சிறுமி’ மாய எதார்த்தக் கதை. ஓவியக் கண்காட்சி அறையில் ஓர் ஓவியத்திலிருந்து வெளியே குதித்த சிறுமி இரவு முழுதும் தன் இஷ்டப்படி விளையாடுகிறாள். இன்னொரு ஓவியத்தில் இருந்த ஒளி வீசும் சூரியனை எடுத்துக் கடலுக்கடியில் மறைத்து வைக்கிறாள். குறும்பு நிறைந்த அவளது விளையாட்டுகள் பற்றி அறிய இக்கதைப் புத்தகம் வாங்கி வாசியுங்கள்.
| வகை:- | சிறார் வாசிப்பு நூல் |
| ஆசிரியர்:- | கொ.மா.கோ.இளங்கோ |
| வெளியீடு:- | பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்+ புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18 |
| விலை | ரூ 20/- |
