பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் எளிய மொழியில் ஏற்கெனவே 23 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் இந்த நூல் வெளியாகி உள்ளது. எளிய மொழி, சிறு சிறு வாக்கியங்கள், படங்கள்- ஆகியவை வாசிப்பு இயக்கச் சிறு புத்தகங்களின் வேர்கள்.
இதில் இரண்டு கதைகள் உள்ளன. பீட்-கேட் முயல்கள் என்பது முதல் கதை. பீட்ரூட் தோட்டம் வைத்திருந்த முயலின் பெயர் பீட். அதன் உடல் பீட்ரூட் நிறம். கேரட் தோட்டம் வைத்திருந்த முயலின் பெயர் கேட். அதன் உடல் ஆரஞ்சு நிறம். இரண்டும் சிறுவயதில் நெருங்கியத் தோழிகள்.
ஒரு நாள் கேட் முயல் ஒரு பீட்ரூட்டைத் திருடித் தின்றுவிட்டது. உடனே அதன் உடலில் சிறு சிறு சிவப்புப் புள்ளிகள் தோன்றின. தன் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று கேட் பயந்தது. ஒரு கூடை கேரட் எடுத்துக் கொண்டு தோழியைப் பார்க்கச் சென்றது. அதன் பின்பு என்ன நடந்தது? கேட் தோழியிடம் மாட்டிக் கொண்டதா? என்று தெரிந்து கொள்ள இக்கதையை வாசியுங்கள்.
எறும்புனா வைரஸ் என்பது இரண்டாவது கதை. இதில் ஓர் எறும்புத்தின்னியும் அதன் குட்டியும் பசியோடு ஓர் எறும்பு புற்றைத் தேடி வருகின்றன. அவற்றிடமிருந்து எறும்புகள் எப்படித் தப்பின என்பதை இக்கதை சுவாரசியமாகச் சொல்கின்றது. 6-12 குழந்தைகள் வாசிக்கச் சுவையான கதைகள்.
| வகை:- | சிறார் வாசிப்பு நூல் |
| ஆசிரியர்:- | ராஜலட்சுமி நாராயணசாமி |
| வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம்,சென்னை-18 |
| விலை:- | ரூ 20/- |
