பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் தமிழ் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மிகக் குறைந்த விலையில் ஏற்கெனவே 23 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில் இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகியுள்ளது.
இதில் இரண்டு கதைகள் உள்ளன. ‘ஊருக்குள் வந்த ஒட்டகம்’ என்பது முதல் கதை. ஊர்த் திருவிழாவுக்கு ஒட்டகம் வருகின்றது. ஒட்டகத்தை முதல்முறையாகப் பார்த்த குழந்தைகளின் எதிர்வினை எப்படி இருந்தது? திருவிழா முடிந்து ஊருக்குள் வந்த ஒட்டகத்துக்குக் குழந்தைகள் என்ன கொடுத்தார்கள்? என்பதை இக்கதை சொல்கிறது. பிற உயிர்களை இயல்பாக நேசிக்கும் குழந்தைகளின் அன்பை இக்கதை பேசுகிறது.
இரண்டாவது கதை ‘அண்டங்காக்கா’. ஓர் அண்டங்காக்காவைத் தனியாகப் பார்த்தால் கெட்டது நடக்குமா? சுடுகாட்டில் பேய் இருக்கிறதா? கையில் எலுமிச்சைப் பழம் வைத்திருந்தால் பேய் நம்மை நெருங்காதா? என்றெல்லாம் இக்கதையை வாசித்துக் குழந்தைகள் தெரிந்து கொள்ளலாம். சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டும் கதை.
| வகை | சிறார் வாசிப்பு நூல் |
| ஆசிரியர் | மருத்துவர் அகிலாண்டபாரதி |
| வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18. |
| விலை | ரூ 20/-. |
