அனைவருக்கும் அன்பு வணக்கம்.
கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்திருக்கிறது. புதிய கல்வி ஆண்டில் பள்ளியில் சேர்ந்து இருக்கும் எல்லாச் சுட்டிகளுக்கும், எங்கள் சுட்டி உலகத்தின் அன்பு வாழ்த்துகள்! குழந்தைகளுக்கும், அவர்களை நேசித்து வழி நடத்தும் ஆசிரியர்களுக்கும் புதிய கல்வியாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள்!
“கல்வி குழந்தைகளைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும்; இந்தச் சமூகம் தன்னைக் குப்பையில் தள்ளினாலும் கல்வியின் உதவியால் மீண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும்; கல்வியால் நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பண்பு சகிப்புத்தன்மை,” என்கிறார் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஹெலன் கெல்லர்.
கோடை விடுமுறையில் எத்தனை பேர், உங்கள் ஊரில் உள்ள நூலகம் சென்றீர்கள்? புத்தகம் எடுத்து வாசித்தீர்கள்? இந்த ஆண்டு முதல் உங்கள் வீட்டில் உங்களுக்கு என்று ஒரு தனி நூலகம் தொடங்குங்கள். ஓர் அலமாரியில் ஒரு தட்டு உங்களுக்காக ஒதுக்கிக் கொண்டு, புத்தகம் வாங்கிச் சேர்க்கப் பழகுங்கள்.
உங்கள் பிறந்த நாளுக்குப் பரிசாக உடைகள் மட்டுமின்றிப் புத்தகங்களைப் பெற்றோரிடம் கேட்டு வாங்குங்கள். தமிழ்நாடு முழுதும் மாவட்டத் தலைநகர்களில் தொடர்ந்து புத்தகத் திருவிழா நடந்த வண்ணம் உள்ளது. வாய்ப்புள்ளோர் அவசியம் புத்தகத் திருவிழாவுக்குச் சென்று உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கி வாசியுங்கள்..
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் ஜூன் 2025 ‘கனவு ஆசிரியர்’ இதழில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரையில் இஸ்ரோ விஞ்ஞானி கே.சிவன் கூறியிருப்பதிலிருந்து, சில முக்கியமான வரிகள் உங்களுக்காக:-
“தமிழ் வழியில் தான் பள்ளியில் பயின்றேன். ஆனால் அது எந்த வகையிலும் என்னைக் குறைவாக்கிவிடவில்லை. எந்த மொழியில் பயில்கிறோம் என்பதைவிட, புரிந்து பயில்கிறோமா என்பதே முக்கியம். ஆசிரியர்களிடமும் மாணவர்களிடம் நான் கூறியது ஒன்று தான்.
உங்களுக்குப் பிடித்த படிப்பைப் படியுங்கள். இந்தப் பாடம் முக்கியம் அந்தப் பாடம் முக்கியம் என்று எதையும் அழுத்த வேண்டாம். என்னை ஒரு வேளை அழுத்தி இருந்தால் நான் இஸ்ரோ தலைவராக ஆகாமல் இருந்திருக்கலாம். மாணவர்களுக்கு எதன் மீது நாட்டம் இருக்கிறதோ அதை நோக்கி ஊக்குவியுங்கள். அவர்களும் பல்வேறு உயரங்களுக்குச் செல்வார்கள்.
படிப்பிற்கு என்றுமே முற்றுப்புள்ளி கிடையாது. தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கவேண்டும். புது புதுத் தொழில் நுட்பங்கள், கண்டுபிடிப்புகளை நாம் படித்து அறிந்து கொண்டே ஆகவேண்டும். தொடர்ந்து கற்றுக் கொண்டே இருப்பது தான், இன்றைய உலகிற்கு ஏற்றாற் போல் நம்மை இயல்பாக இயங்கச் செய்யும்.”
குழந்தைகளின் பன்முகத் திறமை பெருக, பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு அவசியம். எனவே பெற்றோர் அவசியம், குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே வாசிப்பை அறிமுகம் செய்யுங்கள். கதைப் புத்தகங்கள் வாங்கி வாசிக்கக் கொடுங்கள். கதைப் புத்தகம் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி, அவர்களின் படைப்புத் திறனை வெளிக் கொண்டு வரும்.
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.