ச.தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மதிப்புறு தலைவராகவும், செம்மலர் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். அறிவொளி இயக்கப் பணிகளுக்காகப் புதிய கற்றோரின் (neo-literates) வாசிப்புக்காக முப்பதுக்கு மேற்பட்ட சிறு நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் ‘இளந்தளிர் இலக்கியத்திட்ட’த்தின் சீராய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ளார். ‘பதிமூணில் ஒன்னு’, ‘காசு’ உள்ளிட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.
இவரது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பைப் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ‘தெய்வமே சாட்சி’, ‘அரசியல் எனக்குப் பிடிக்கும்’, ‘இருளும் ஒளியும்’, ‘சாமிகளின் பிறப்பும் இறப்பும்’, ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’, ‘நான் பேச விரும்புகிறேன்’ உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மலிந்த நம் தேசத்தில், ஆண்களை நோக்கிக் கேள்விகளை எழுப்பிய கட்டுரைகள், ‘எசப்பாட்டு’ என்ற நூலில் இடம்பெற்றுப் பரவலான கவனம் பெற்றன.
‘தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்’ என்ற இவரது முக்கியமான நூல், தமிழ்ச்சிறுகதை வரலாற்றின் முதல் ஐம்பது ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறது. இந்நூலில் அறுபதுக்கும் மேற்பட்ட படைப்பாளர்களை இளம் வாசகர்களுக்கு ஆசிரியர் அறிமுகம் செய்திருக்கிறார்.